வாரிசு சான்றிதழுக்கு ரூ.3,000 லஞ்சம்: திருவாரூர் விஏஓ அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை


திருவாரூர்: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்தவர் அருள்தரன். இவர் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக 2015ம் ஆண்டில் புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, அங்கு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணியாற்றி வந்த, திருவாரூர் வடகரை ஊராட்சி தென்கரை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அருள்தரன் ரூ.500-ஐ முன்பணமாக பழனிவேலிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை மறுநாள் தருவாக கூறியுள்ளார். அதன்பின், லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள்தரன், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த யோசனைப்படி, மறுநாள் ரசாயனம் தடவிய ரூ.1,500 லஞ்ச பணத்தை பழனிவேலிடம் அருள்தரன் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பழனிவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய பழனிவேலுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

x