ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கோவை மாநகர காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இதில் தேடப்பட்ட கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து, நெல்லை டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும், தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையருமான செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து, டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள முகமது தவுபிக்கின் மனைவி நூருன்னிஷாவை போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் திருவனந்தபுரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்