ராமநாதபுரம்: ரூ. 60 லட்சம் மதிப்பிலான ரத்தினக்கல்லை மதுரை நகை வியாபாரியிடமிருந்து வழிபறி செய்த 7 பேரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கட்சைகட்டி பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் ஜாதிகற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னிடம் உள்ள 7 கிராம் அலெக்ஸ்சான்டர் ரத்தினக்கல்லை, அதன் ரசீதுடன் விற்பனை செய்வதற்காக ஜனவரி மாதம் 21-ஆம் தேதி அன்று ராமநாதபுரம் வந்துள்ளார்.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் 7 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் முனியசாமி வைத்திருந்த ரூ.60,000,00/- லட்சம் மதிப்பிலான அலெக்ஸாண்டர் ரத்தினக்கல், அதன் ரசீது, அவரது போன், ரொக்கம் ரூ.15,000/-பணத்தையும் பறித்து சென்று விட்டனர்.
தொடர்ந்து முனியசாமி ராமநாதபுரம் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
விசாரணையை தொடங்கிய தனிப்படை போலீஸார் வழிபறியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துசெல்வம் என்பவரை முதலில் பிடித்து விசாரித்ததில், அவர் முனியசாமியிடம் இருந்து ரத்தினக்கல் உள்ளிட்டவற்றை பறித்து சென்றதை ஒத்துக்கொண்டதுடன், வழிபறியில் தொடர்புடைய மற்ற நபர்களின் விபரங்களை தெரிவித்துள்ளார்.
மேலும் வழிபறியில் ஈடுபட்ட தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அபுதாஹிர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த முகம்மது அசாருதீன், முகம்மது நௌபல், தூத்துக்குடியை சேர்ந்த கனகராஜ், ராஜா ஜோஸ்குமார், கே. கனகராஜ் ஆகிய ஏழு பேர்களை கைது செய்து அவர்களிடமிருந்த இரத்தின கல், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது