தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலிமாறன் (42). இவர் பேட்மா நகரத்தில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (30) கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மறுநாள் மகேஸ்வரிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அவரை அடக்கம் செய்யும்போது, கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் செயினை கழற்றுவதற்கு பார்த்தபோது, அதனை காணவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏரல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஏரல் அருகே உள்ள கணபதி சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கொழுந்துவேல் (38) என்பவர் மகேஸ்வரி கழுத்தில் கிடந்த நகையை திருடியது தெரியவந்தது. மகேஸ்வரியின் சடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் போது, அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. கொழுந்துவேலை கைது செய்து, அவரிடமிருந்த 5 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.