திருச்சி: நாகையில் பணியாற்றியபோது கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார். நாகை நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பி.பெரியசாமி (54). கடந்த 2022-ம் ஆண்டு நாகை கீச்சாங்குப்பம் கடற்கரை பழைய மீன்பிடி துறைமுகத்தில் படகில் 400 கிலோ கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற 5 பேர் கும்பலை, நாகை நகர தனிப்படை போலீஸார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அப்போது விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் பெரியசாமி, இந்தக் கடத்தலில் மூளையாக செயல்பட்ட எஸ்.சிலம்புச் செல்வன் என்பவரை முதல் குற்றவாளியாக சேர்க்காமல், அவரை காப்பாற்றும் நோக்கில் 5-வது குற்றவாளியாக சேர்த்துள்ளார். மேலும், கஞ்சா கடத்திய கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களது வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகளை முடக்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளலாமல் எதிரிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்.
20 கிராம் கஞ்சா பிடிபட்டாலே அந்த வழக்கை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக தலைமை அலுவலக குறிப்பாணை உள்ள நிலையில், 400 கிலோ கஞ்சா பிடிபட்ட பிறகும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்துள்ளார். அத்துடன், இந்த குற்றவழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுடன் ஆய்வாளர் பெரியசாமி சீருடையில் தனியார் விடுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி, பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்தி அப்போது வெளியானது. இதையடுத்து பணியில் ஒழுங்கீனமான, கடமை தவறி செயல்பட்டு வந்த புகாரில் ஆய்வாளர் பெரியசாமி மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, அவர் திருச்சி மாவட்டம் காணக்கிளிய நல்லூர் காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருந்தார். விசாரணையின் அடிப்படையில், ஆய்வாளர் பெரியசாமியை பணி நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த 1997-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் காவல் பணியில் சேர்ந்த பெரியசாமி, 2029-ம் ஆண்டு ஓய்வு பெற இருந்த நிலையில், குற்றவாளிகளுடன் தொடர்பிலிருந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.