திருவள்ளூர்: சென்னை, எண்ணூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரி கணவருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(35). இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தன் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து, எண்ணூர் அருகே உள்ள சேலவாயில்-ஆண்டாள் நகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். ராஜ்குமார் குடும்பத்தினருடன், ராஜ்குமாரின் மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமியும் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டில் ராஜ்குமார் தன் மனைவியின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாக, அந்த 17 வயது சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தற்போது திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், ராஜ்குமார் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி இன்று அளித்தார். அதில், ராஜ்குமாருக்கு, சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
: