புள்ளிமானை வேட்டையாடி இறைச்சி விற்பனை: சேலத்தில் 3 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்


சேலம்: சேலம் மாவட்ட எல்லைப் பகுதியில் புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த 3 பேருக்கு வனத்துறையினர் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.

சேலம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புள்ளிமானை வேட்டையாடி அதன் இறைச்சியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய ஒரு கும்பல் முயல்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில், வனவர்கள் பழனிவேல், தினேஷ், மணிவண்ணன் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சேலம் புறநகர் பகுதிகளில் மாறுவேடத்தில் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்.

அதில், சந்தேகத்துக்குரிய 3 நபர்களை தனிப்படையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சேலம் பொட்டியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (22), மதியழகன் (28), தேக்கம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (26) என்பதும், அவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து புள்ளிமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவர்களை வனத்துறையினர் கைது செய்து, சுப்பிரமணி, மதியழகன் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சமும், பிரகாஷூக்கு ரூ. 2 லட்சமும் அபராதம் விதித்தனர்.

x