மதுரை: வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மதுரை திருநகர் 7-வது ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி அம்மாள். இவர், கடந்த 2004-ல் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், ராஜாத்தி அம்மாள் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.
திருநகர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த விஜியை கைது செய்தனர். 2 வது நபரான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாதங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை முத்து (40) என்பவர் கேரளாவில் தலைமறைவாக இருந்தார்.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் சசிபிரியா அறிவுரையின்படி, ஆய்வாளர் சித்ரா தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பேரரசி, பாண்டி, காவலர்கள் செந்தில்முருகன், ராஜராஜன் அடங்கிய தனிப்படையினர் தாதங்குளத்தில் பதுங்கி இருந்த சுடலை முத்துவை 21 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான நபரை கைது செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.