3வது திருமணத்துக்கு திட்டம்; காதலனுடன் சேர்ந்து 2வது கணவரை தீர்த்துக்கட்டிய பெண்: வேளாங்கண்ணியில் பயங்கரம்


பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்து திருமணம் செய்த ஒரே வாரத்தில், 2 நண்பர்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து விட்டு நாடக மாடிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) ஆகியோர், கடந்த பிப்.28ம் தேதி வேளாங்கண்ணி க்கு வந்துள்ளனர். இங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும் மறுநாள் வேளாங்கண்ணி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகில் உள்ள கருவைக் காட்டில் ஜனார்த்தனன் கொலை செய்யப் பட்டுக் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று, ஜனார்த்தனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, ஜனார்த்தனின் மனைவி எலன்மேரியிடம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) சுப்ரியா விசாரணை நடத்தினார். அப்போது, “பெங்களூரு வைச் சேர்ந்த எனது கணவர் ஜனார்த்தனின் நண்பர்கள் சாகர், ஜீவா ஆகியோர் எங்களின் அறையில் வந்து தங்கியிருந்தனர். அவர்களுடன் வெளியே சென்ற எனது கணவரை அவர்கள் இருவரும் கொலை செய்துவிட்டதாக என்னிடம் வந்து சொல்லிவிட்டு, தப்பிச் சென்றுவிட்டனர்” என எலன்மேரி கூறியுள்ளார்.

இதையடுத்து, பெங்களூருவுக்கு தப்பிச் செல்ல முயன்ற சாகர், ஜீவா ஆகிய இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், ஜனார்த்தனன் கொலையில் எலன்மேரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

ஒரே கல்லூரியில் படித்த ஜீவாவும், எலன்மேரியும் காதலித்து வந்ததும், அதற்கு ஜனார்த்தனன் இடையூறாக இருப்பார் எனக் கருதி, அவரை திட்டமிட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, எலன்மேரியையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, எலன்மேரிக்கு ஏற்கெனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரியில் முதல் திருமணம் நடந்துள்ளதும், 2-வதாக ஜனார்த்தனை திருமணம் செய்ததும், அவரையும் பிடிக்காமல் ஜீவாவை 3-வதாக திருமணம் செய்ய நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

x