சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார்.மேலும், எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விக்ரமன் எச்சரித்துள்ளார்.
சென்னை அய்யப்பன்தாங்கலை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராஜு முருகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராஜு முருகனின் மனைவி பெயர் ஹேமா சின்ஹா. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் நடப்பதாக ராஜு முருகனின் மனைவி ஹேமா குற்றம்சாட்டி உள்ளார். இதுபற்றி அவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்து பாலியல் ரீதியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக புகார் அளித்த ராஜு முருகனின் மனைவி ஹேமாவுக்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மனஉளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராஜு முருகனின் மனைவி ஹேமா சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛ இந்த குடியிருப்பில் 3 மாதத்துக்கு ஒருமுறை பராமரிப்புதொகை வசூலிக்கப்படுகிறது. மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரூ.22 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட குப்பையை சரியாக அகற்றுவது இல்லை. மின்சார பிரச்சனையை சரிசெய்யவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வளாக நீச்சல் குளத்தில் எனது குழந்தைகளை தடுக்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்டால் மனஉளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகின்றனர். போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காதபடி தடுக்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில வீடியோக்கள் வெளியானதாக சொல்லப்படுகிறது. அதில், 2024ம் ஆண்டு மே மாதம் வரை இக்குடியிருப்பில் வசித்த பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாக தகவல்கள் பரவின. இந்த சம்பவத்தின்போது அவரை கையும் களவுமாக பிடித்ததாகவும், இதனை வீடியோ எடுத்தவர்களை மிரட்டி பெரும் தொகை கொடுத்து வீடியோக்களை அழித்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார் பிக்பாஸ் விக்ரமன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால் சில நிமிடங்களில் இந்த பதிவினை அவர் நீக்கியுள்ளார்.