நாகர்கோவில்: வியாபாரியை கொலை செய்து உடலை எரித்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே வடலிவிளை அரசு உயர்நிலைப் பள்ளியை அடுத்துள்ள பாண்டியன் சாலை பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத் தக்க ஆண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது. அவரது கால் துண்டிக்கப்பட்டு சாலையோரம் கிடந்தது. காலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் இதை பார்த்து கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், நாகர்கோவில் ஏஎஸ்பி லலித்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் உடல் அருகே கான்கிரீட் கல் மற்றும் கருகிய நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது. அவரது தலையிலும் பலத்த காயம் இருந்தது. எனவே, கான்கிரீட் கல்லை தலையில் போட்டு அவரை கொலை செய்த பின்னர் உடலை எரித்திருக்கலாம் என்று போலீஸார் கருதினர்.
மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் நாகர்கோவில் வடலிவிளையை சேர்ந்த குமரேசன் மகன் வேல் (42) என்று தெரிய வந்தது. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
தினந்தோறும் இரவு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு இவர் செல்வது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டபோது, ஒரு கும்பல் அவரை மடக்கி, கீழே தள்ளி கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை எரித்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கோட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக உள்ள பகுதியில் வியாபாரி கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.