திருப்பத்தூர்: கத்தியால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிதி நிறுவன அதிபர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர் மீது காவல் துறையினர் கொலை வழக்கை பதிவு செய்தனர்.
திருப்பத்தூர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜ் (38). நிதிநிறுவனர். இவர், கடந்த மார்ச் 1-ம் தேதி இரவு 11 மணியளவில் தனது வீட்டில் உள்ள திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் மது போதையில் ஆனந்த ராஜை அவதூறாக பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த சிலம்பரசன் கத்தியால் ஆனந்த ராஜை பல இடங்களில் வெட்டியும், அருகில் இருந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் மயங்கி விழுந்தார். மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் ஆனந்த ராஜ் காயமடைந்திருப்பதை கண்டு, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு ஆனந்த ராஜ் மாற்றப்பட்டார். இது குறித்து ஆனந்த ராஜ் தாயார் சந்தியா, திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.