குடும்ப சொத்துக்காக தந்தை அடித்துக் கொலை; உதகையில் மகன் கைது


நீலகிரி: உதகையில் சொத்துக்காக தந்தையை மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மிஷ்னரிஷில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (72). இவருக்கு சந்தோஷ் (42), விக்னேஷ் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. தாவரவியல் பூங்கா பகுதியில் காபி ஷாப் நடத்தி வந்த மாணிக்கம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் சென்று குடியேறிவிட்டார். இவரின் மூத்த மகன் சந்தோஷ், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகவும், இளைய மகன் விக்னேஷ் திருச்சியில் உடல் எடை குறைப்பு சம்பந்தமான மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் குடும்பத்துடன் வசிக்கும் சந்தோஷுக்கு, ஆடம்பர வாழ்க்கை காரணமாக கடன் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், தனது கடனை அடைப்பதற்காக தந்தை மாணிக்கத்திடம் குடும்ப சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி உதகை மிஷனரிஹில் பகுதியில் இருந்த சொந்த வீட்டை பழுது பார்ப்பதற்காக மாணிக்கம் வந்தார். உதகைக்கு தந்தை வந்த தகவல் அறிந்தவுடன், சொத்து பிரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைக்காக சந்தோஷும் வந்துள்ளார். அன்று இரவு ஏற்பட்ட வாக்கு வாதத்தில், மாணிக்கத்தின் கழுத்து பகுதியை சந்தோஷ் கடுமையாக தாக்கியதில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்த அவர் சுய நினைவை இழந்தார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு உதகை நகர மத்திய போலீஸார் சென்று, மாணிக்கத்தை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாணிக்கம் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிந்த போலீஸார், சந்தோஷை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

x