குடும்ப தகராறில் விபரீதம்: திருப்பத்தூரில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது


தீபா, ரமேஷ்

திருப்பத்தூர்: குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (50). இவரது மனைவி தீபா (38). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் கணவரிடம் கோபித்துக்கொண்ட தீபா வீட்டை விட்டு வெளியேறி திருப்பத்தூர் அடுத்த பா.வு.ச. நகரில் உள்ள ரமேஷ் தங்கையான வரலட்சுமியின் வீட்டுக்கு சென்றார்.

இதையறிந்த ரமேஷ் உடனே, தனது தங்கை வீட்டுக்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி தீபாவை சரமாரியாக வெட்டினார். இதில், பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே, ரமேஷ் அங்கிருந்து தப்பியோடினார்.

இது குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த தீபா உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரமேஷை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x