சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்: பெண் கைது


சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப் பட்டுள்ளார். ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (25.02.2025) விருகம்பாக்கம், சாய்பாபா காலனி 3வது தெருவிலுள்ள உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய வளசரவாக்கம் சுபமங்களம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லதா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட எதிரி லதா விசாரணைக்குப் பின்னர் இன்று (26.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x