தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு மென் பொறியாளர் தற்கொலை @ பெருங்களத்தூர்


பெருங்களத்தூர்: பெருங்களத்தூர் அருகே தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு மென் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்களத்துார், கிருஷ்ணா சாலையை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). அவரது மனைவி கிருத்திகா, (40). இருவரும், மென் பொறியாளர்கள். கணவன்– மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கிருத்திகா கணவரை பிரிந்து, அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில், நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதனால், வெங்கடேஷ் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அதிக கடன் தொல்லை மற்றும் மனைவி உடன் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வெங்கடேஷ், தனக்குத்தானே உடலில் மின் வடத்தை சுற்றிக்கொண்டு, மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, தற்கொலை செய்துகொள்ளும் முன், தனது மனைவியின் மொபைல் போனுக்கு, ‘எமர்ஜென்சி’ என்று, குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இந்த குறுந்தகவலை சற்று தாமதமாக பார்த்த கிருத்திகா, அது குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர், வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்றபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

கதவை உடைத்து பார்த்த போது, வெங்கடேஷ் தனக்கு தானே மின் வடத்தை உடலில் சுற்றிக்கொண்டு மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின், மின் இணைப்பை துண்டித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் உடலை கைப்பற்றி, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து, பீர்க்கன்காரணை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x