மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன்(22). இவர், 2021-ம் ஆண்டு டிச.5-ம் தேதி 12 வயது சிறுமியிடம் பழகி, பாலியல் தொல்லை கொடுத்து, திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீஸார் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கவியரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத் தவறினால், மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார்.