திருப்பூர்: கும்பகோணம் மாவட்டம் மாமாங்குளத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி மாலா (36). மகன் சுஜித்குமார் (11). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருண்குமார் இறந்துவிட்டார். மாலா தனது மகனுடன், திருப்பூர் மங்கலம் சாலையில் கோழிப்பண்ணை அருகே உள்ள கே.டி.கே.தோட்டம் பகுதியில் வசித்து வந்தார். பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் தனது மகனுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, மாலாவும் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, இருவரும் மயங்கிக் கிடந்தனர்.
அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாலா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஜித்குமாருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருப்பூர் மத்திய போலீஸார் வழக்கு பதிந்து, மாலாவின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரிக்கின்றனர்.