திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் கொலை: பெருமாநல்லூரில் உறவினர் கைது


திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே கணக்கம் பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் காஜா மொய்தின் (37). பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சர்மிளா பானு. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. அதே பகுதியில் சர்மிளா பானுவின் தங்கை யாஸ்மின், தனது கணவர் வாஜித் (39) என்பவருடன் வசித்து வருகிறார். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் காஜா மொய்தின் மற்றும் வாஜித் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் காஜா மொய்தினை வாஜித் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த காஜா மொய்தினை அங்கிருந்தவர்கள் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக சர்மிளா பானு அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து வாஜித்தை கைது செய்தனர்.

x