நிர்மலா தேவி வழக்கில் பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் விடுதலைக்கு எதிராக சிபிசிஐடி மேல்முறையீடு


மதுரை: உதவி பேராசிரியை நிர்மலாதேவி மீதான கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்சென்ற வழக்கில் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி மாணவர் விடுதலையானதை எதிர்த்து சிபிசிஐடி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் நிர்மலாதேவி. தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டில் தன்னிடம் படித்த மாணவிகளைப் பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து நிர்மலாதேவியை கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்தும், பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்மலாதேவி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு தொடர்பாக 82 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வழக்கு முழுவதுமே வீடியோ விசாரணை போலவே இருந்தது.

சாட்சிகள் முழுமையாக கவனிக்கப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. எனவே, தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த மேல்முறையீட்டு மனுவுடன் நிர்மலாதேவி மேல்முறையீட்டு மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை பிப். 25-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

x