தாம்பரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் சிட்லபாக்கம் போலீஸார் எனக்கூறி சாலையில் நடந்து சென்ற நபர்களிடம் ரூ.70 லட்சம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை மர்ம கும்பல் திருடி சென்றதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக போலீஸார் தகவல் அளிக்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ஜெயேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர் சுஹேல் அகமது (29). இவர் சென்னை பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டை தனியார் வங்கியில் அடமானம் வைத்து ரூ.70 லட்சம் பணத்தை கடனாக பெற்று, அந்த பணத்தை அவரது கடையில் வேலை செய்யும் ஆகாஷ், பிரவீன் ஆகிய நபர்களிடம் கொடுத்து, அவரது வீட்டில் வழங்குமாறு கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட நபர்கள் இருவரும் நேற்று மாலை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்துள்ளனர். பின்னர், குரோம்பேட்டை, ராதா நகரில் உள்ள வீரபத்திரன் தெருவில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து, சிட்லபாக்கம் போலீஸார் எனக்கூறி மிரட்டி அவர்களை அழைத்து சென்று ஒரு காரில் ஏற்றியுள்ளனர்.
பின்னர், ஆகாஷ் என்பவரை மேடவாக்கம் சிக்னல் அருகே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பிரவீனோடு சோழிங்கநகர் பகுதியில் சுற்றி விட்டு, அவர்களிடமிருந்த பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்துக் கொண்டு மீண்டும் ராதாநகர் அருகே இறக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த சுஹேல் அகமது சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்த போது தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.