பாளையங்கோட்டை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது


திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்கல்லூரியின் தற்காலிக பேராசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தூய சவேரியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாலை ஷிப்டில் படிக்கும் திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு, அதே கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்த மருதகுளம் பகுதியை சேர்ந்த பிரைட் ஜோவட்ஸ் (34) என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

செல்பேசி மூலமாக அடிக்கடி பேசுவது, இரவில் ஆபாச குறுஞ் செய்திகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளில் அப்பேராசிரியர் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோருடன் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாணவிக்கு பாலியல் ரீதியாக பிரைட் ஜோவட்ஸ் தொல்லை கொடுத்தது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து பேராசிரியர் பிரைட் ஜோவட்ஸை போலீஸார் கைது செய்தனர்.

x