ஈரோடு: சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு செங்குத்தபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் (43). இவரது மனைவி மேகலா (40). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். வசூபட்டி பகுதியில் உள்ள நிறுவனத்தில் மேகலா பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் மேகலா பணிபுரிந்து வரும் நிறுவனத்துக்கு வந்த கோபால், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கத்தியால் அவரைக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மேகலா, மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோபாலைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அறச்சலூரில் ஒருவர் கைது
அறச்சல்லூர் அருகே உள்ள தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பழனிசாமி, தனது அறையில், நேற்று முன் தினம் கொலை செய்யப்பட்டார். அறச்சலூர் போலீஸார் விசாரணையில், தொழிற்சாலையில் தங்கி பணி புரியும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (54) என்பவருக்கு இந்த கொலை வழக்கில் தொடர்புடையது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.