புதுச்சேரி அதிர்ச்சி: யாசகம் எடுப்பவர் போல் நடித்து திருடியவர் கைது; ரூ.1.31 லட்சம் மீட்பு


புதுச்சேரி: வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோகர் (62). இவர் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதனால், இவர் புதுச்சேரியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று வசித்து வந்தார்.

இந்தநிலையில் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு மீண்டும் வந்தார். அவர், யாசகம் எடுப்பவர் போல கையில் பழைய சாக்குகளுடன், பழைய தாள்கள் உள்ளிட்டவற்றை சேகரிப்பது போல சுற்றி வந்தார். இதனால் இரவில் ரோந்து சென்ற போலீஸார் அவரை சந்தேகப்படவில்லை. இதற்கிடையே கடந்த 5-ம் தேதி புதுச்சேரி பாரதி தெருவில் தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் ஷட்டர் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டன.

இது குறித்து ஒதியன்சாலை போலீஸார் வழக்குப் பதிந்து ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் குற்றவாளியைத் தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், மனோகர் யாசகம் எடுப்பவர் போல தொப்பியுடன் இரவில் நடமாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவரை பிடித்து விசாரித்ததில், பாரதி தெருவில் தனியார் நிறுவனத்தில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கம் மற்றும் இரும்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர் மீது ஏற்கெனவே திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கைதான மனோகரை புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

x