கேரள வங்கி தங்க நகைகளை திருப்பூரில் வைத்து மோசடி - மேலும் 1 கிலோ பறிமுதல்


மாதா ஜெயக்குமார் மற்றும் கார்த்திக்

திருப்பூர்: கேரள மாநில தேசிய வங்கியில் இருந்து கையாடல் செய்யப்பட்ட 15 கிலோ 850 கிராம் ஏற்கெனவே மீட்கப்பட்டிருந்த நிலையில், திருப்பூர் தனியார் வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த மேலும் 1 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை எடோடியில் (பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா) தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக திருச்சி மாவட்டம் முசிறி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாதா ஜெயகுமார்(34) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் ஓராண்டுக்கு பின் எர்ணாகுளம் வங்கி கிளைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதிய மேலாளர் எடோடியில் உள்ள வங்கி கிளையில் பொறுப்பேற்றார். அங்கு லாக்கரில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது, ரூ. 17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் நகைகள் போலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வங்கியின் முன்னாள் மேலாளர் மாதா ஜெயக்குமார் தலைமறைவானார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வடகரை போலீஸார் வழக்கு பதிந்து மாதா ஜெயக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது கையாடல் செய்த நகைகளை திருப்பூரில் உள்ள தனியார் வங்கி கிளைகளில் அடமானம் வைத்து பணத்தை பெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா அருகே அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கிக் கிளை, காங்கயம் சாலையில் உள்ள மற்றொரு வங்கிக் கிளையிலும் விசாரணை நடத்தி 15 கிலோ 850 கிராம் நகைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் போலீஸார் மீட்டனர்.

திருப்பூரில் உள்ள வங்கியில் நகையை அடமானம் வைப்பதற்கு திருப்பூர் சந்திராபுரத்தை சேர்ந்த கார்த்திக்(29) என்பவர் மாதா ஜெயக்குமாருக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு கார்த்திக்கை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இதன் பின்னர் அவரைக் காவலில் எடுத்து கோழிக்கோடு போலீஸார் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் விவரங்கள் குறித்தும் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருப்பூரில் இருந்து சுமார் 1 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். இதுவரை மொத்தமாக 16 கிலோ 850 கிராம் நகைகளை கேரள போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

x