விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - பெண் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்


விருதுநகர்: பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் நடந்த பயங்கர வெடி விபத்தில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், 4 பெண்கள் உள்பட 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

மோகன் ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீசத்திய பிரபு என்ற பட்டாசு ஆலை விருதுநகர் சின்னவாடியூர் அருகே உள்ள தாதப்பட்டியில் இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது ஒரு அறையில் இருந்த பட்டாசு மருந்துகள் வேதி மாற்றம் ஏற்பட்டு வெடித்துச் சிதறியது. தீப்பொறி அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி வெடித்துச் சிதறின. இதில், 8 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33) 100 சதவிகித தீக்காயம் அடைந்தார்.

மேலும், பொம்மையாபுரத்தைச் சேர்ந்த நாகப்பநாயக்கர் மனைவி முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த ஜெய முருகன் மனைவி மாணிக்கம் (50), அதி வீரம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் மனைவி கஸ்தூரி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், காயமடைந்த அதி வீரம்பட்டியைச் சேர்ந்த ரவிச் சந்திரன் மனைவி வீர லட்சுமி (35) சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகிறார்.

வெடி விபத்து நடந்த ஆலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகள் ஈடுட்டனர். அப்போது, கட்டிட இடிபாடுகளுக்கு இடையே அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதையடுத்து, பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மோகன்ராஜ், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x