சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில்; ஒருவர் கைது - 2 பெண்கள் மீட்பு


சென்னை: திருமங்கலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், ”சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்று திருமங்கலம், என்.வி.என் நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய தேனாம் பேட்டை செனடாப் சாலையை சேர்ந்த தீபக் பவுடல் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட எதிரி தீபக் பவுடல் விசாரணைக்குப் பின்னர் பிப்ரவரி 4ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டனர்” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x