ராணிப்பேட்டை: சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவத்தில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் காவல் நிலைய வளாகத்துக்குள் நேற்று நள்ளிரவு (02.02.2025) முகமூடி அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு பெட்ரோல் குண்டுகளை எடுத்து, வரவேற்பாளர் இடம் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். சத்தம் கேட்டு சக காவல்துறையினர் அங்கு வந்து தண்ணீரை ஊற்றி தீயை உடனடியாக அணைத்தனர். அதற்கு முன்னதாக சிப்காட்டில் உள்ள அரிசி கடையின் மீதும் இதே நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா சிப்காட் காவல் நிலையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின்படி 7 தனிப்படைகள் அமைத்து காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். முதல் கட்டமாக சந்தேகத்தின் பேரில் 14 பேரை பிடித்து காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக அதிகாலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கையில், “சிப்காட் பகுதியில் சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஒருவர் அப்பகுதி கடைக்காரர்களிடம் தொடர் மாமூல் கேட்டு வசூலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடியின் கூட்டாளிகள் சிலர் அப்பகுதியில் உள்ள அரிசி கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே, காவல்துறையினர் பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர்.
எனவே, அரிசி கடைக்காரர் தான் தங்களை பற்றி புகார் கொடுத்து இருக்கலாம் என்று ரவுடி கும்பல் நினைத்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ரவுடியின் கூட்டாளிகள் அரிசி கடையின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு சென்றதாக தெரிகிறது’ என்றனர். காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி மாநிலம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.