மதுரை: பேரையூர் அருகே காவலர் கொலையில் அவரது மைத்துனரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், மங்கள்ரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (32). நாகையாபுரம் காவல் நிலையத்தில் கிரேடு -2 காவலராக பணிபுரிந்தார். இவருக்கும், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொன்மணிக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாஜித் (10) மகன் உள்ளார்.
இந்நிலையில் குடும்ப பிரசிச்னையில் 7 ஆண்டுக்கு முன்பு பொன்மணி பெற்றோர் வீட்டுக்கு கோபித்துக் சென்ற நிலையில், அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் சாஜித், பொன்மணியின் தம்பி அர்ச்சுனன் (23) வீட்டில் வசித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அடிக்கடி மகனை பார்க்க சிவா, அர்ச்சுனன் வீட்டுக்கு சென்று வந்தார்.
இதற்கிடையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது மகனை சிவா தனது வீ்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பாப்பிநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காதணி விழாவில் சிவா தனது மகனுடன் பங்கேற்றார். அவ் விழாவுக்கு அர்ச்சுனனும் வந்திருந்தார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அர்ச்சுனன் கத்தியால் குத்தியதில் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த நாகையாபுரம் போலீஸார் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அர்ச்சுனன் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.