திருப்பூரில் 239 மூட்டைகளில் கடத்தப்பட்ட 1,658 கிலோ குட்கா பறிமுதல்: 7 பேர் கைது‌


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 2 கார்கள் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த குட்கா மூட்டைகள் சாலையில் சிதறின. இதையடுத்து அந்தக் கார்களை ஓட்டி வந்த நபர்கள் தப்பியோடினர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பெருமாநல்லூர் போலீஸார், வாகனச் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த இன்னொரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 239 மூட்டைகளில் 1,658 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவை பெங்களூருவில் இருந்து அவிநாசிக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ்குமார் (21), மற்றொரு தினேஷ்குமார் (23), கேசவ்ராம் (26), மாதரம் (26), துதாரம்(24), கோபரம் (35), ஓப்ரம் (30) என்ற ஏழு பேரை போலீஸார் கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்தனர்.