கடன் பிரச்சினை, தகராறு காரணமாக குரோம்பேட்டை, தாம்பரத்தில் இருவர் வெட்டிக் கொலை


தாமஸ், கார்த்திக் ராஜா

தாம்பரம்: குரோம்பேட்டையில் கடன் பிரச்சினை காரணமாக லாரி உரிமையாளர் நேற்றிரவு வெட்டிக் கொல்லப்பட்டார். இதேபோல் தாம்பரத்தில் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரும் இரவு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை, நாகல்கேணி டி.எஸ்.லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் (50). சொந்தமாக லாரி வைத்து, தோல் கழிவுகளை ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த, சபரி (எ) பிரதீவ் ராஜன் (31) என்பவருக்கு ரூ.28 ஆயிரம் பணம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் திருப்பிக் கேட்டதில் சபரிக்கும், தாமஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், சபரி பணம் தருவதாக கூறி தாமஸை நேற்று இரவு திருநீர்மலைக்கு வருமாறு அழைத்திருக்கிறார். இதை நம்பிச் சென்ற தாமஸை கருமாரியம்மன் கோயில் அருகே வைத்து சபரி சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தாமஸுக்கு தலைப்பகுதியில், 9 வெட்டுகளும், கைகளில் 9 வெட்டுகளும் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சபரி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தானாக சென்று சரணடைந்தார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தாமஸிடமிருந்து ரூ 28,000 சபரி கடனாக பெற்றதாகவும் அதை திருப்பிக் கேட்டபோது ஒரு வாரம் கழித்து தருவதாக கூறியதாகவும் அதற்கு தாமஸ், பணம் கொடுக்க முடியவில்லை என்றால் உன்னுடைய அம்மாவையும், மனைவியையும் ஒரு வாரம் என்னுடன் அனுப்பி வை என்று கூறியதால் ஆத்திரமடைந்தது, எதற்காக அப்படி கேட்டாய் என்று கேட்டதற்கு, நான் அப்படித்தான் கேட்பேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று அவர் கேட்டதால் ஆத்திரம் வந்து சம்பவ இடத்தின் அருகில் இருந்த மெக்கானிக் ஷாப்பில் இருந்த இரும்பை எடுத்து முகம், தலை, கையில் வெட்டியதாக சபரி தெரிவத்து இருக்கிறார்.

சபரி மீது குரோம்பேட்டை மற்றும், சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு சம்பவம்: தாம்பரம் அடுத்து இரும்புலியூர் தர்மதோட்டம், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர், கார்த்திக் ராஜா (28). தாம்பரம் காவல் நிலையத்தில் இவர் மீது அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் சவாரிக்காக நின்று கொண்டிருந்த கார்த்திக் ராஜாவை அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜா தாம்பரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் எந்த ஒரு ஆட்டோ ஸ்டாண்டிலும் உறுப்பினராக இல்லை. பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆனந்தன் என்ற ஆட்டோ ஓட்டுநர், ‘இந்த லைனில் ஆட்டோ ஓட்டக்கூடாது. இது எங்களுடைய இடம் எங்களை மீறி யாரும் இங்கு ஆட்டோ ஓட்டக்கூடாது’ எனக் கூறி இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இது விஷயமாக கார்த்திக் ராஜாவுக்கும் ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால், கார்த்திக் ராஜா, ‘நான் இங்குதான் ஆட்டோ போட்டு ஓட்டுவேன்’ என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தக் காரணத்திற்காக ஆனந்தனும் ஊர் பெயர் தெரியாத 6 நபர்களும் சேர்ந்து கார்த்திக் ராஜாவை கத்தியால் வெட்டிவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனந்தன், சரத், ரஞ்சித், கமல் மற்றும் இருவரை தேடி வருகிறோம்” என்றனர்.