புதுச்சேரி கடலில் குளித்த இரு பொறியியல் மாணவர்கள் அலையில் சிக்கி மாயம்: தேடும் பணி தீவிரம்


புதுச்சேரி: புதுச்சேரி அருகே கடற்கரையில் குளித்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 10 பேர் இன்று வீராம்பட்டிணம் பகுதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் இன்று மாலையில் குளித்துள்ளனர். அப்போது கடல் அலையால் மாணவர்களான திருக்கனூரைச் சேர்ந்த திவாகர் (20), முத்திரைப்பாளையம் மோகன்தாஸ் (20) ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டனர்.

உடனே அங்கிருந்த மற்ற மாணவர்கள் சத்தம் போட்டனர். அங்கிருந்த மீனவர்கள் விரைந்து வந்தனர். ஆனால், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் மாயமாகினர். அதனால் அவர்களை மீனவர்கள் தேடினர். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸாரும் விரைந்து வந்து மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இருவரையும் கண்டறிய முடியாத நிலையில், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x