திருமணம் செய்ய வற்புறுத்திய 19 வயது கர்ப்பிணிப் பெண் கொன்று புதைப்பு: காதலன் வெறிச்செயல் 


ஹரியானா: திருமணம் செய்துகொள்ள காதலனை வற்புறுத்திய 19 வயது கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்று புதைத்ததாக இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த அக்டோபர் 22-ம் தேதி, தனது சகோதரி காணாமல் போனதாக, அவரின் சகோதரர் டெல்லி காவல்துறையில் புகாரளித்தார். மேலும், அவர் தனது சகோதரியுடன் நட்பில் இருக்கும் ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இந்த புகாரை பெற்றவுடன், கொலையை விசாரிக்க டெல்லி காவல்துறையின் சார்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. விசாரணையின்போது பெண்ணின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பெண்ணுடன் நட்பில் இருந்த டெல்லியை சேர்ந்த சஞ்சு என்கிற சலீம் மற்றும் பங்கஜ் ஆகியோரை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அக்டோபர் 21 ஆம் தேதி ஒரு காரை வாடகைக்கு எடுத்ததாகவும், அப்பெண்ணை சில உடைமைகளுடன் அழைத்துச் சென்றதாகவும் சஞ்சு ஒப்புக்கொண்டார். கர்ப்பமாக இருந்த அந்த 19 வயது பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சஞ்சுவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் இப்போது முடியாது என சஞ்சு கூறியுள்ளார். இதனையடுத்து கர்வா சவுத் நாளில், அந்தப் பெண் இது தொடர்பாக சஞ்சுவுடன் சண்டையிட்டுள்ளார்.

சண்டையைத் தொடர்ந்து, சஞ்சு தனது நண்பர்களான பங்கஜ் மற்றும் ரித்திக் ஆகியோருடன் சேர்ந்து ஒரு காரை ஏற்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் அந்தப் பெண்ணுடன் காரில் ஏறி ஹரியானாவின் ரோஹ்தக் நோக்கிச் சென்றனர். ரோஹ்தக் மாவட்டத்தின் மதீனாவில் உள்ள ஒரு பகுதியில் அவர்கள் அந்தப் பெண்ணைக் கொன்று, நான்கு அடி ஆழமான குழி தோண்டி சடலத்தை புதைத்தனர்.

இதனையடுத்து போலீஸார் மதீனாவுக்குச் சென்று குழியில் புதைக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். மேலும், இந்த வழக்கில் 3-வது குற்றவாளியான ரித்திக்கை போலீஸார் தேடிவருகின்றனர்.

x