சென்னை போதை பொருள் வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மகன் உட்பட 19 பேர் கைது


மாதிரிப் படம்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி ஒருவரது மகனும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அரும்பாக்கம், கொடுங்கையூர், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக நைஜீரியாவைச் சேர்ந்த கபீப் குளோன்ஸ், ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வநாதன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1 கோடி மதிப்புடைய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கைதானவர்களிடமிருந்து ரொக்கம், செல்போன்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தமிழக காவல் துறையின் ஓய்வுபெற்ற முன்னாள் சட்டம்- ஒழுங்கு டிஜிபி ரவீந்திரநாத் மகன் அருண் (40) சென்னை மவுண்ட் (புனித தோமையர் மலை) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிஜிபி மகன் ஒருவரே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

x