கணவருடன் சுற்றுலா சென்ற பெண் 5 ஆண்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ம.பியில் அதிர்ச்சி


மத்தியப் பிரதேசம்: ரேவா மாவட்டத்தில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண், ஐந்து ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குர்ஹ் தெஹ்சிலில் உள்ள ஒரு பிக்னிக் ஸ்பாட்டில் இருக்கும் ஒரு பிரபலமான கோயிலில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள ஒரு நீரூற்று பகுதிக்கு கணவன் மனைவி இருவர் கடந்த திங்கள் கிழமை வந்துள்ளனர். இந்த சூழலில் நீரூற்றுக்கு அருகில் வைத்து ஐந்து பேர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இச்சம்பவம் மாவட்ட காவல்துறை தலைமையகத்திலிருந்து 20 கிமீ தொலைவில் நடந்துள்ளது. இது குறித்து செவ்வாய்கிழமை மதியம் 1.30 மணியளவில் தம்பதியினர் குர்ஹ் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். அப்போது தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் கை மற்றும் மார்பில் பச்சை குத்தியிருந்ததாக அந்தப் பெண் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய ரேவா தலைமையகத்தின் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஹிமாலி பதக், “அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவரும், அவரது கணவரும் 19-20 வயதுக்குட்பட்டவர்கள், இன்னும் கல்லூரியில் படிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடுவதைத் தவிர்க்க கவனமாக இருக்கிறோம். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, அதே நாளில் இரவு 7 மணிக்கு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது

விசாரணையின் ஒரு பகுதியாக 100 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரிக்கிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எங்கள் விசாரணை நடந்து வருகிறது. அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

x