காட்டு யானை முன்பு செல்ஃபி எடுத்தபோது விபரீதம்: இளைஞரை மிதித்துக் கொன்றது 


மும்பை: மகாராஷ்டிராவில் செல்ஃபி எடுத்தபோது காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் உள்ள அபாபூர் வனப்பகுதியில் காட்டு யானையைப் பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த் ராம்சந்திரா சத்ரே மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் நேற்று காலை சென்றுள்ளார். அப்போது அங்கே காட்டு யானையை பார்த்த ஆர்வத்தில் மூவரும் அதன்முன்பு நின்று செல்ஃபி எடுத்தனர். அப்போது காட்டு யானை அவர்களை துரத்தியது. இதில் இருவர் தப்பித்த நிலையில், ஸ்ரீகாந்த் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த 23 வயதான ஸ்ரீகாந்த் சத்ரே, தனது நண்பர்கள் சிலருடன் கட்சிரோலி மாவட்டத்தில் கேபிள் பதிக்கும் பணிக்காக நவேகானில் இருந்து வந்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன், செவ்வாய்கிழமையன்று சிட்லபாக்கம் மற்றும் கட்சிரோலி வனப் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது. முட்னூர் வனப்பகுதிக்கு உட்பட்ட அபாபூர் வனப்பகுதியில் யானை சுற்றித் திரிவதாக கூறப்பட்டது. அந்த நேரத்தில், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் யானையைப் பார்க்க அங்கே சென்றுள்ளனர். அப்போது ஸ்ரீகாந்த் யானையுடன் தூரத்தில் இருந்து செல்ஃபி எடுத்தபோது, யானை அவரை தாக்கி நசுக்கியது.

இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x