புதுச்சேரி: 5 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை


புதுச்சேரி: ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

புதுச்சேரி கல்மண்டபம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (26). தனியார் நிறுவன கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2021ல் 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. சிறுமியின் தரப்பில் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸார் போக்சோ வழக்கில் ரஞ்சித்தை கைது செய்தனர். ரஞ்சித் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி இன்று தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

x