வேதாரண்யத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை நபர் கைது


வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பெரிய குத்தகை பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி தங்கியிருந்த இலங்கை நபர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள பெரியகுத்தகையைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (35). இவர் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை சட்டவிரோதமாக தங்க வைத்திருப்பதாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து. வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீஸார் இன்று முனீஸ்வரன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த முனீஸ்வரனையும் இலங்கை நபரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில், முனீஸ்வரன் வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த நபர், இலங்கை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் (29) என்பது தெரியவந்தது. இருவருக்கும் கஞ்சா கடத்தல் தொடர்பாக நட்பு இருந்ததாகவும், கீர்த்தன் மூலம் முனீஸ்வரன் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x