‘இளம்பெண் கடத்தி கொலை’ - நடக்காத சம்பவத்தை நீதிமன்றத்துக்கு கொண்டுவந்த வழக்கறிஞருக்கு கண்டனம்


சென்னை: சென்னையைச் சேர்ந்த இளம்பெண் கடத்தி கொல்லப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர் செய்த முறையீடு பொய்யானது என்றும், அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண்ணை, சில ரவுடிகள் வீடு புகுந்து கடத்திச் சென்று, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரி்த்து இதுதொடர்பாக பதில் அளிக்க போலீஸாருக்கு உத்தரவி்ட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜி்ன்னா ஆஜராகி, ‘`இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் செய்த முறையீடு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்பதும், இந்த புகாரே தவறானது என்பதும் தெரியவந்துள்ளது. உண்மையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. அதனால் அந்தப் பெண் இப்படியொரு சம்பவம் நடந்ததாக தெரிவித்த தகவலை உண்மைச் சம்பவம் என நம்பி வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த முறையீடு காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் நிறுத்தி வைக்கப்பட்டது’' என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘`இப்படியொரு சம்பவத்தை திரைப்படங்களில் கூட பார்த்தது இல்லை. தகவல் தெரிவித்ததாக கூறப்படும் அந்தப்பெண் குறித்து முன்பே ஏன் நீதிமன்றத்தில் கூறவில்லை?’' என முறையீடு செய்த வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற விவகாரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

x