பெண் கான்ஸ்டபிளுக்கு லிப்ட் கொடுத்து பாலியல் வன்கொடுமை: உ.பியில் அதிர்ச்சி சம்பவம்


கான்பூர்: கர்வா சௌத் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டிற்கு சென்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு, லிப்ட் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அயோத்தியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர், சனிக்கிழமை இரவு கான்பூருக்கு 'கர்வா சௌத்' பண்டிகையைக் கொண்டாட வந்திருந்தார். அவர் தனது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவரின் பக்கத்து வீட்டுக்காரரான தர்மேந்திரா பஸ்வான் அவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார்.

ஆனால், வீட்டில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக, பஸ்வான் அந்தப் பெண்ணை ஒரு ஆளரவமற்ற வயல்வெளிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்னர் அந்தப் பெண் கான்ஸ்டபிள் தர்மேந்திராவின் விரலை கடித்துவிட்டு தப்பி ஓடினார்.

அந்தப் பெண் கான்ஸ்டபிள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகி புகாரளித்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி சில மணிநேரங்களில் குற்றவாளியை கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

x