மாணவியை காதலிப்பதில் போட்டி - கத்திக் குத்தில் ஈடுபட்ட மாணவன் உள்ளிட்ட 6 பேர் கைது @ வண்டலூர்


வண்டலூர்: வண்டலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவர். இவருடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியை ஏற்கனவே அப்பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் தனது காதலியுடன் அந்த மாணவர் சுற்றிதிரிவதை அறிந்து, கல்லூரி மாணவர், தனது நண்பர்களான கிரிதரன் (18), திவாகர் (18), சஞ்சய் (18), மற்றும் 17 வயது சிறுவர்கள் ஆகியோருடன் நேற்று மாலை பள்ளி சென்று திரும்பி வந்து கொண்டிருந்த அந்த மாணவரை வழிமறித்து, பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கல்லூரி மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தொடை, கை, கழுத்து, ஆகிய பகுதியில் குத்திவிட்டு தப்பினார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த, பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து கிளாம்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து, கத்தி குத்து காயத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் போலீஸார் அப்பகுதியில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றச்செயலில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் நேற்று கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பள்ளி மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

x