மாந்தரீக சடங்கால் விபரீதம்: வீட்டில் இறந்துகிடந்த 2 சகோதரர்கள்; குடும்பத்தினர் 4 பேருக்கு சிகிச்சை


சத்தீஸ்கர்: சக்தி மாவட்டத்தில் இரண்டு சகோதரர்கள் மர்மமான சூழ்நிலையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரத்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டுல்டி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டில் பல்வேறு சடங்குகளை செய்து வந்தனர்.உள்ளே பூட்டியிருந்த வீட்டில் இருந்து பலத்த கோஷமிடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் பீதியடைந்தனர்.

இதனையடுத்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டை திறந்தபோது விகாஸ் கோண்ட் (25) மற்றும் விக்கி கோண்ட் (22) ஆகியோர் சுயநினைவின்றி கிடந்தனர். மற்ற குடும்ப உறுப்பினர்கள் சில சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அங்கே உஜ்ஜயினியில் இருக்கும் சாமியார் ஒருவரின் புகைப்படம் அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, உடனடியாக சுயநினைவின்றி கிடந்த இரண்டு சகோதரர்களும் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இவர்களது தாய் பிரித் பாய் (70), சகோதரிகள் சந்திரிகா, அம்ரிகா, மற்றொரு சகோதரர் விஷால் ஆகியோர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இறந்தவர்களின் உடல்களில் விஷப் பொருளின் தடயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமா படேல் தெரிவித்தார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

x