சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை  


குழந்தைகள் தர்ஷிகா ஸ்ரீ , ரோகித்துடன் சங்கீதா.

சேலம்: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, சேலத்தில் போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜன்(38). இவரது மனைவி சங்கீதா (34), மகன் ரோகித் (8), மகள் தர்ஷிகா ஸ்ரீ (4). குழந்தைகள் இருவரும் முறையே 3-ம் வகுப்பும், எல்கேஜியும் படித்து வந்தனர்.

அடிக்கடி தகராறு.. இவர்கள் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள காவலர்குடியிருப்பில் வசித்து வந்தநிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்குச் சென்ற கோவிந்தராஜ், இரவு வீடு திரும்பினார்.

வீட்டில் மனைவி சங்கீதா தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார். மேலும், இருகுழந்தைகளும் அருகிலேயே இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீஸார், மூவரின் உடல்களையும் மீட்டு,பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கணவர் மீது சந்தேகப்பட்ட சங்கீதா, அடிக்கடி தகராறு செய்தது வந்ததும், தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x