தூத்துக்குடி வேம்பார் அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் உயிரிழப்பு


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். மதுரை ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே பெரியசாமிபுரத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு கடந்த 15-ம் தேதி சென்றனர். அவர்கள் நேற்று காலையில் பெரியசாமிபுரம் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்றின் வேகத்தால், அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.

எதிர்பாராதவிதமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த முருகேசன் மகள் இலக்கியா (21), செல்வகுமார் மனைவி கன்னியம்மாள் (50), சாமிக்கண்ணுநாதன் மனைவி முருகலட்சுமி (38), முருகன் மனைவி ஸ்வேதா (22), செல்வகுமார் மனைவி அனிதா (29) ஆகியோர் அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அவர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அங்கிருந்த மீனவர்கள் 5 பேரையும் மீட்க முயன்றனர். எனினும், இலக்கியா, கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். முருகலட்சுமி, ஸ்வேதா, அனிதா ஆகியோர் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வேம்பார் கடலோரக் காவல் நிலையபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x