பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு டெய்லர் தற்கொலை - திருவொற்றியூரில் சோக சம்பவம்


சென்னை: மனைவி இறந்த சோகத்தில், பிள்ளைகள் இருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு டெய்லர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை, ஜானகி அம்மாள் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அருள் (47). இவர் கொருக்குப்பேட்டையில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணி செய்து வந்தார். இவருக்கு அம்ஸா (45) என்ற மனைவியும், கல்லூரி 2ம் ஆண்டு படித்த மகள் ரம்யா (18), 9ம் வகுப்பு படித்த ராஜேஷ் (14) என்ற மகனும் இருந்தனர். கடந்த 16 நாட்களுக்கு முன்னர் அம்ஸா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்திருந்தார்.

மனைவி இறந்த துக்கத்தில் அருளும், தாயை இழந்த வேதனையில் அவர்களது இரு பிள்ளைகளும் இருந்தனர். இந்நிலையில், அருளின் தாயார் இன்று மதியம் அருள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் அருள் சடலமாக கிடந்தார்.

தொடர்ந்து படுக்கை அறையில் ரம்யா, ராஜேஷ் ஆகிய இருவரும் உயிரற்ற நிலையில் கிடந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருளின் தாயார் கதறி துடித்தார். தகவல் அறிந்து திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் அருள் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

x