பூண்டியில் பைக்கில் சென்ற குடும்பத்தினரை மறித்து 5 பவுன் தாலியை பறித்த முகமூடி கொள்ளையர்கள்


கும்பகோணம்: பாபநாசம் வட்டம் பூண்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினரை மறித்து 5 பவுன் தாலிச் செயினை நள்ளிரவு 1 மணிக்கு பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அருமலைக்கோட்டை தொண்டான்தோப்பைச் சேர்ந்தவர் சரவணன் (43), இவரது மனைவி உஷா (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரவணன், தனது மனைவி, குழந்தை ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு, மீண்டும் நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

பூண்டிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஒரு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து, ஆயுதங்களை காட்டி மிரட்டி, சரவணன் மனைவி உஷா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 4 கிராம் தோடு (1 ஜோடி), ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இது தொடர்பாகச் தம்பதிகள் அளித்த புகாரின் அடைப்படையில், அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x