அரவக்குறிச்சியில் போலீஸ் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தப்ப முயன்ற 2 இளைஞர்கள் கைது!


கரூர்: அரவக்குறிச்சியில் வாகன சோதனையின்போது போலீஸ் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தப்ப முயன்ற 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மின் வாரிய அலுவலகம் அருகே அதிகாலை அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில், ஒருவர் திடீரென தான் மறைந்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேயை எடுத்து காவலர்கள் மீது அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும், சுதாரித்துக் கொண்ட போலீஸார், அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் கரூர் ஊரக உட்கோட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கோகுல் (27), திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கோகுல்நாத் (21) எனத் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் இரும்புக் குழாய்கள், திருப்புளி, முகமுடி, கையுறை, பெப்பர் ஸ்பிரே, 2 லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவை இருந்துள்ளது.

அவர்கள் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடுவதற்கு வந்தது தெரியவந்தது. இதில் கோகுல் மீது திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 24 வழக்குகளும், கோகுல்நாத் மீது திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளும் உள்ளன. கரூர் நகர உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு இருவர் மீதும் வெள்ளியணை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், கரூர் கிளைச் சிறையில் அடைத்தனர். இதனிடையே ரோந்துப் பணியின் போது சிறப்பாக செயல்பட்டு, பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இரு குற்றவாளிகளை பிடித்த தலைமைக் காவலர் சரவணன், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

x