போக்சோ வழக்கில் ஜாமீன் ரத்து - பரமக்குடி அதிமுக கவுன்சிலருக்கு அக்.25 வரை நீதிமன்ற காவல்


ஸ்ரீவில்லிபுத்தூர்: போக்சோ வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பரமக்குடி அதிமுக நகராட்சி கவுன்சிலர் சிகாமணியை அக்டோபர் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பரமக்குடி நகராட்சி கவுன்சிலர் சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜா முகமது மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட அன்ன லட்சுமி உமா, கயல்விழி ஆகிய 5 பேரை கடந்த மார்ச் மாதம் போலீஸார் கைது செய்தனர். அதன்பின் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கில் கவுன்சிலர் சிகா மணிக்கு பரமக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்ததுடன், வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி, 5 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிகாமணி தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், 3 வாரங்களுக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிகாமணி சரணடைய வேண்டும் என செப்டம்பர் 26ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கவுன்சிலர் சிகாமணி (44) ஆஜரானார். அவரை அக்டோபர் 25ம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி (பொ) சுதாகர் உத்தரவிட்டார். பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் அக்டோபர் 25ம் தேதி முதல் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

x