அதிமுக கூட்டத்தில் பட்டாசு வெடித்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பாதிப்பு; 20 பேர் மீது வழக்கு - திருச்சியில் பரபரப்பு


பார்வை பாதிக்கப்பட்ட எஸ்எஸ்ஐ சுப்பிரமணியன்.

திருச்சி: திருவெறும்பூர் அருகே அதிமுக செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களை வரவேற்று பட்டாசு வெடித்ததில் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணில் காயம்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர் மீது திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைபார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக் செய்திருந்தார். இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் கொறடாவுமான ஆர்.மனோகரன் ஆகியோர் வந்தனர்.

அப்போது அவர்களை வரவேற்பதற்காக வாழவந்தான் ராஜா என்பவர் சரவெடி வைத்துள்ளார். அந்த வெடி வெடித்ததில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் காயம்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சுப்பிரமணியனை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக், அமைப்புச் செயலாளர் மனோகரன் உள்ளிட்ட 20 பேர் மீது திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

x