ரூ.5,000 லஞ்சம் வாங்கிய காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர், கணவர் கைது


சிவகங்கை: காளையார்கோவிலில் வீட்டு வரி விதிப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் அவரது கணவர் உட்பட மூவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜோஸ்பின் மேரி. இவர் தலைவராக இருந்தாலும் இவரது கணவர் அருள்ராஜ் தான் ஊராட்சி மன்றத் தலைவர் போல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் (46) என்பவர் தனது வீட்டுக்கு புதிதாக வரி விதிப்பு ஏற்படுத்துவதற்காக அருள்ராஜை அணுகியுள்ளார். அவர், வீட்டு வரி விதிக்க முதலில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

பின்னர் ரூ.5 ஆயிரமாக குறைத்துக் கொண்டார். எனினும் லஞ்சம் தர விருப்பமில்லாத காளீஸ்வரன், இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜோஸ்பின் மேரியிடம் புகார் தெரிவித்தார். ஆனால் அவரோ, தனது கணவர் கேட்கும் பணத்தை கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரன், இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார்.

அவர்களது ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த அருள்ராஜிடம் கொடுத்துள்ளார் காளீஸ்வரன். அவர் அப்பணத்தை தனது உதவியாளர் குமாரிடம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். அதன்படி குமாரிடம் காளீஸ்வரன் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜான் பிரிட்டோ, ஆய்வாளர்கள் கண்ணன், ஜேசுதாஸ், உதவி ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் அருள்ராஜ், குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அத்துடன், வேறொரு நிகழ்ச்சியில் இருந்த ஜோஸ்பின் மேரியையும் கைது செய்தனர். ஒரே நேரத்தில், லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர், அவரது கணவர், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டது காளையார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x